இந்தியப் பொருளாதாரம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி அதாள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.சொல்லப் போனால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது.கடந்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.4 ஆக இருந்தது.இந்த ஆண்டு தொடக்க காலாண்டில் அது 6.5% ஆக வீழ்ச்சி அடைந்தது.இரண்டாவது காலாண்டில் அது 5.3% என்னும் அளவிற்க்கு கடும் வீழ்ச்சியடைந்தது.(1% வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட 40 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவல்லது).இந்த வளர்ச்சியின் வீழ்ச்சி வேலையில்லாத் திண்டாத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கும்.அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 36% வீழ்ச்சியடைந்துள்ளது என்றும்,7% உயர்ந்துள்ள பணவீக்கம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 56,57 என்று விண்ணைத்தொடும் அளவிற்க்கு சரிந்துக்கொண்டே செல்கிறது என்றும் மத்திய அரசு கணக்கு காட்டுகிறது.ரூபாய் மதிப்பு சரிவினால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலை உயர்ந்து வர்த்தக பற்றாக்குறை ஏற்படும்.நுகர்பொருள் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 8.0% லிருந்து 4.1% குறைந்துள்ளதையும்,தொழில்துறையின் வளர்ச்சி 0.1% வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய அரசு கணக்குக் காட்டுகிறது.ஆனால் உண்மைப் பொருளாதாரமோ இதைவிடப் பலமடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது.தொழில் உற்பத்தி,அந்நிய முதலீடு..என்று பேசுகிறார்களே தவிர மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதைப் பற்றி பேசுவதில்லை.குறிப்பாக அரிசி,பருப்பு,பால்,முட்டை,சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை 150% மேல் உயர்ந்துள்ளது.உணவுப்பணவீக்கம் 10.73% என்ற அளவில்தான் உள்ளது என்று உண்மை அறிக்கையை வெளியிடாமல் மறைக்கிறது.இந்தியப் பொருளாதாரோமோ இப்போதுதான் வீழ்ச்சியடைந்துள்ளது போல் சித்தகரிக்கின்றனர்.
தனியார்மயமும்,தாராளமயமும் இந்தியாவில் அதிரடியாக திணிக்கப்பட்டப் பின்னர் சிறுதொழிலும்,விவசாயமும் நசிந்து விவசாயத் தற்கொலை அதிகரித்தபோது அதனை பொருளாதார நெருக்கடியாக ஏற்கவில்லை.பங்குச்சந்தை சரிவு,அந்நிய முதலீடு வீழ்ச்சி,ரூபாய் மதிப்புச் சரிவு என்றதும் இப்போது பொருளாதார நெருக்கடிப் பற்றி பேசுகின்றனர்.தனியார்மயத்தின் விளைவு அம்பானி போன்றோர் உருவானது,தாராளமயம் மற்றும் உலகமயத்தின் விளைவு பங்குசந்தைச் சரிவு,ரூபாய் மதிப்புச்சரிவு என்பது போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இன்று இந்திய பொருளாதாரம் என்பது சில பண முதலைகளின் கையில் சிக்கியுள்ளது,பொருளாதாரமும் இதைச் சுற்றியே இருக்குமாறு வகுக்கப்பட்டுள்ளது.என்றைக்குதான் தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டு பொருளாதாரத்தை மதிப்பிட போகிறார்கள்.பெட்ரோல் விலையேற்றம் பற்றி பேசுகிறார்களே தவிர கல்விக்கட்டணம்,பேருந்துக்கட்டணம்,மருத்துவச்செலவு விலையேற்றம் என விலைவாசி ஏறியதை பற்றிப் பேசுவதில்லை.ஸ்டேண்டர்ட் அண்ட் புவர்ஸ் தர மதிப்பீட்டு நிறுவனம் கூட விவசாய நெருக்கடி பற்றி வாய்திறக்காமல் அந்நிய முதலீடு வீழ்ச்சி,நிதி நெருக்கடி பற்றிதான் பேசுகின்றன.நிதிபற்றாக்குறையை போக்க கடும் நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறிய பிரதமர்,அந்நிய முதலீட்டைப் பெருக்க கடும் நடவடிக்கைகளை எடுப்போம்,மானியங்களைக் குறைப்போம் என்று கூறியுள்ளார்.அதற்காக இந்திய அரசு பத்திரங்களில் அந்நிய அரசு நிதி நிறுவனங்கள்,அந்நிய அரசு மத்திய வங்கி,காப்பீட்டு நிதி நிறுவனங்கள் ஏறத்தாழ ரூ.11ஆயிரம் கோடி முதலீடு செய்ய தாராள அனுமதி வழங்கியுள்ளது
.
மன்மோகன் அரசு முன்வைத்துள்ள நடவடிக்கைகள் பெரும் முதலாளிகளின் நலனைத் தான் கொண்டுள்ளது.நெருக்கடிக்குத் தீர்வாக நாட்டின் உள்நாட்டுச் சந்தையை வலுப்படுத்த எந்த திட்டமும் இல்லாததால்,மீண்டும் அது பொருளாதார நெருக்கடிக்குத் தான் தள்ளும்.உள்நாட்டுச் சந்தையை விரிவாக்கி வலுப்படுத்த தொழில் மற்றும் விவசாயத் துறையில் அரசு பெருமளவு முதலீடு செய்ய வேண்டும்.அதைவிட்டு விட்டு முதலீடுப் பற்றாக்குறை என்று கூறிக் கொண்டு அந்நிய முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.பருவமழை பொய்த்ததால் 40 சதவீதம் வரை விவசாய உற்பத்தி சரியும்,விளைவு உணவுப் பொருட்களின் விலை இன்னும் உயரும்.விவசாயிகளும் அரசின் உதவியை நம்பிதான் இருக்கின்றனர்.ஆனால் மன்மோகன்சிங்கோ ஐரோப்பா யூனியன் பொருளாதார சரிவிலிருந்து மீள 1000 கோடி டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.இங்கே விவசாயிகள் வாழ வழியில்லாமல் தற்கொலைச் செய்கிறார்கள் அவர்களை காப்பாற்றுவதைவிட்டு விட்டு,தன் காலில் காயத்தை வைத்துக்கொண்டு அடுத்தவன் காயத்திற்க்கு மருந்து போடும் கதையாக உள்ளது.இதுபோதாதென்று மத்திய அரசு வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்திற்க்கு ஒரு செல்போன் இலவசமாக கொடுக்க திட்டம் தீட்டியுள்ளது.
"ஒவ்வொரு மனிதருக்கும் செல்போன்"என்ற திட்டத்தின் மூலம் செல்போன் வழங்க திட்டம் தீட்டியுள்ளது.இதற்காக சுமார் 7,000 கோடி ஒதுக்கியுள்ளது.வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு இலவச செல்போன்களைக் கொடுத்து அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது இந்த அரசு.வயிற்றுக்கு வழி இல்லாதவனுக்கு செவிக்கு செல்போன் தேவையா?பொருளாதாரக் கொள்கைகள் தான் பயனளிகவில்லையென்றால் அரசின் நலத்திட்டங்கள் கூட ஏழைகளின் வறுமைநிலைக்கு எதிராக தான் அமைகிறது.மிதமிஞ்சிய பொருளாதார வளர்ச்சியால் யாருக்கு இலாபம்?தனியார்மயம் மற்றும் தாராளமயம் புகுத்தும் முன்னர் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 21 ஆக இருந்தது இன்று அதன் மதிப்பு 57 ரூபாய் வரை செல்கிறது.காரணம் அந்நிய முதலீடு மற்றும் உலகமயமாக்கலுக்கு திறந்து விடப்பட்ட கதவுகள்.மக்களின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் மட்டுமே வலிமையான பொருளாதாரமாக இருக்க முடியும்.எனவே இந்திய பொருளாதார மேதைகள் இதை கருத்தில் கொண்டு பொருளாதார கொள்கைகளை தீர்மானிப்பார்களா?
by
VELS